JaffnaSrilanka News

வடக்கு கிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயவங்கள் – 20 பேர் இந்தியா பயணம்!

யாழ். பல்கலைக்கழகத்தால் முன்னெடுக்கப்படும் ‘மாற்று வலுவுடையவர்களுக்கான செயற்கை அவயவங்களைப் பொருத்தும் செயற்றிட்டத்தின் கீழ், வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பயனாளர்கள் இன்று(05) இந்தியா, தமிழ்நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குறித்த செயற்றிட்டத்தின் பயனாளர்கள் மற்றும் செயற்றிட்ட நிர்வாகிகள் இன்று புறப்பட்டு சென்றனர்.

குறித்த செயற்றிட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த செயற்கை அவையவங்களுக்கான மையத்தின் செயற்றிட்டப் பொறியியலாளர் லவன்யா நகுலானந்தம், “வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்குவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும்.

குறித்த செயற்றிட்டமானது யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் கே.செல்வகுமாரால் ஆரம்பிக்கப்பட்டு, Canada Fund for Local Initiative மற்றும், Canada Sri Lanka Business Convention ஆகிய அமைப்புகளால் நிதி வழங்கப்படுகிறது. 

 இந்த செயற்றிட்டத்தின் முதல் கட்டமாக 20 பேர் தெரிவு செய்யப்பட்டு இந்தியாவிற்கு அழைத்து செல்லப்பட்டு சிறப்பு செயற்றிட்ட முகாம் ஒன்றில் பங்கெடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கான செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் 09ம் திகதி மீண்டும் வரும் பொழுது அழைத்து செல்லப்படும் அனைவருக்குமான செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டிருக்கும்” என்றார்.

  இதேவேளை குறித்த செயற்றிட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பயனாளர்களில் ஒருவரான கந்தையா துரைராஜசிங்கம், ” நான் நீண்ட நாட்களாக செயற்கை அவையவங்களுக்கான தேவைகளுடன் இருந்தேன். நாமாகவே குறித்த செயற்கை அவயவங்கள் பொருத்துவதானால் அதிக பணம் தேவைப்படும் நிலையில், இந்த செயற்றிட்டம் தமக்கு மிகுந்த பயனுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button