
கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு இந்தியா மற்றும் இலங்கையில் இருந்து 8 ஆயிரம் யாத்திரிகர்கள் வருகை தருவர்கள் என எதிர்பார்ப்பதாக யாழ்.மாவட்ட பதில் அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
மார்ச் மாதம் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கச்சதீவு திருவிழா தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(07) நடைபெற்றது.
யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற இந்த கூட்டத்தில் யாழ். இந்திய துணை தூதரகத்தின் அதிகாரிகள்,முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பதில் அரசு அதிபர் மருதலிங்கம் பிரதீபன்,”திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.
குறிப்பாக குடிநீர், மலசலகூடம், சுகாதாரம் பேணல், சுகாதார சேவைகள், பேருந்து போக்குவரத்து, கடற் போக்குவரத்து உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அதிகாரிகள் தயாராகியுள்ளனர்.
இதேநேரம் சிறந்த பேருந்து போக்குவரத்து சேவையை முன்னெடுக்க இ. போ.ச. மற்றும் தனியார் பேருந்து சேவைகளில் ஈடுபடும் தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று கடற்போக்கு வரத்து சேவையை மேற்கொள்ள படகுகளின் தரம் தொடர்பாக கடற்படையினர் ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், கடற் போக்கவரத்து சேவைக்கான போக்குவரத்து கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கான ஒரு வழி கடற் போக்குவரத்து கட்டடணமாக 1000 ரூபாவும், குறிகாட்டுவன் துறைமுகத்திலிருந்து 1300 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வருகைதரும் யாத்திரிகர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெருந்திருவிழாவுக்கு இம்முறை இந்தியாவிலிருந்து 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் இலங்கையின் 4 ஆயிரம் யாத்திரிகர்களுக்கும் அனுமதிக்கப்படவுள்ளதோடு, இரு நாடுகளினதும் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் என 1000 பேருமாக 9 ஆயிரம் பேர் வருகைதரவுள்ளனர்.
அந்தவகையில் குறித்த பெருந்திருவிழாவுக்கு வருகைதரவுள்ளவர்கள் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி எதுவித இடையூறுகளும் இன்றி கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.