JaffnaNews

வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல்!

வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (25) நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த  தெரிவத்தாட்சி அலுவலர், “எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள  உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில், தேர்தல் நடைமுறைகள் ஒன்றாக காணப்பட்டாலும், வாக்கெண்ணல் செயற்பாடு வேறுபட்டதாக அமையும்.

குறிப்பாக உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வட்டார நிலையங்களில் வாக்கெண்ணல் செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது.  வட்டார உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களே வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களாகவும், வட்டாரத்தின் பிரதம வாக்கெண்ணும் அலுவலர்களாகவும், பெறுபேறுகளை வெளியிடும் அலுவலர்களாகவும்  நியமிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்குரிய கடமைகளை சரியான அறிவுறுத்தல்களை பின்பற்றி வினைத்திறனாக மேற்கொள்ளவேண்டும்.

தேர்தலை நடாத்தும் பொறுப்பு சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலரைச் சார்ந்திருப்பதால் சரியான முறையில் அறிவுறுத்தவும்” – என்றார்.

அதனைத்தொடர்ந்து, உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பாக வட்டாரத்துக்கு பொறுப்பான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள்  மற்றும் பிரதம வாக்கெண்ணும் அலுவலராக கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான கடமைகள் தொடர்பாக  உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ. சசீலனால் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும்,வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணல் நிலையங்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளரும், போக்குவரத்து ஒழுங்குகளுக்கு பொறுப் பாகவுள்ள உதவித்தெரிவத்தாட்சி அலுவலருமான F.C. சத்தியசோதியால் தெளிவுபடுத்தப்பட்டது.

தேர்தல் கட்டுபாட்டுப் பிரிவின் செயற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளரும் கட்டுபாட்டுப் பிரிவின்  உதவித் தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ். ரமேஷ்குமாரால் விளக்கமளிக்ப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button