NewsSrilanka News

E-8 விசா சட்டவிரோதமானது – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!

தற்போது நடைமுறையில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவில் தொழில் வழங்குவதாக கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் பணம் வசூலிக்கும் மோசடி இடம்பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கோ, தனிநபர் அல்லது தனிநபர் குழுவிற்கோ E-8 தொழில்வாய்ப்புப் பிரிவின் கீழ் தொழில் அல்லது அது தொடர்பான பயிற்சியை வழங்குவதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லையென பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவொரு வேலைவாய்ப்பு நிறுவனமோ, தனிநபரோ அல்லது தனிநபர் குழுவோ அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு சட்டப்பூர்வ அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை, மேலும் எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ அத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் சட்டவிரோதமானது.

அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது அதனை ஆதரிக்கும் வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், அல்லது முகவர் நிலையங்கள் அல்லாத வேலைவாய்ப்பு நிறுவனங்கள், தனிநபர்கள் அல்லது இடைத்தரகர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் விதிகளின் கீழ் அவர்களின் தரத்தைப் பொருட்படுத்தாமல் கைது செய்யப்படுவார்கள்.E-8 விசா பிரிவின் கீழ் செயல்பட எந்த தனியார் முகவர் நிலையத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

E-8 விசாவின் கீழ் தென்கொரியாவில் தொழிலுக்காக வெளிநாடு செல்ல விருப்பமுள்ள எந்தவொரு இலங்கையருக்கும் இதுபோன்ற பணம் அல்லது வேறு ஏதேனும் செயல்முறைகளில் சிக்கினால், கொரியாவிற்கு அல்லது வேறு எந்த நாட்டிற்கும் தொழிலுக்காக வெளிநாடு செல்ல முடியாத அபாயம் இருப்பதால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அத்தகைய மோசடி நடவடிக்கைகளில் சிக்காமல் இருக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கிறது.

எனவே, இலங்கை மக்கள் அனைவரும் இதுபோன்ற மோசடியாளர்களிடம் சிக்கிக் கொண்டு வெளிநாடு செல்லும் கனவை சிதைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையிலுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button