JaffnaNews

சிறுவர் இல்ல அனுமதிகள் அதிகரித்து செல்வது சவாலாக மாறியுள்ளது : வடக்கு ஆளுநர்!

வறுமை, பெற்றோர் மறுமணம் ஆகிய காரணங்களால் சிறுவர் இல்லங்களில் சேர்ப்பதற்காக அனுமதிகோரும் சிறுவர்களின் எண்ணிக்கை வடக்கில் அதிகரித்துச் செல்கிறது. இது புதியதொரு சவாலாக மாறியுள்ளதென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து கள நிலைமைகளை ஆய்வு செய்யும் யுனிசெப் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் நேற்று(02) சந்தித்துக் கலந்துரையாடினர்.இதன்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர், “1991ஆம் ஆண்டு உதவி அரசாங்க அதிபராக தான் பதவியேற்ற காலத்திலிருந்து யுனிசெப் அமைப்பு பல்வேறு வகையான உதவிகளை எமது மக்களுக்குச் செய்து வருகின்றது. அதற்கான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வடக்கில் சிறுவர் துஷ்பிரயோகம், இளவயது கர்ப்பம் என்பன முன்னைய காலங்களுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளன.

மேலும், வடக்கு மாகாணம் தற்போது புதிய சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. பாடசாலை இடைவிலகல்கள் அதிகரித்துள்ளன. சிறுவர் இல்லங்களுக்கு சிறுவர்களை சேர்க்கும் போக்கு அதிகரித்துச் செல்கின்றது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

பொருளாதார பாதிப்பால் ஏற்பட்ட வறுமை நிலைமை ஒரு காரணமாக உள்ளபோதும், பெற்றோர் மறுமணம் செய்வதால்தான் பெரியளவு பாதிப்பு ஏற்படுகின்றது. சிறுவர் இல்லங்களில் சிறுவர்களை இணைப்பதை ஊக்குவிக்கவேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சிறுவர் இல்லங்களை நோக்கி வருபவர்களை இணைக்காமல்விட்டாலும், பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே இது எமக்கு சிக்கலான நிலைமையாக உள்ளது”- என்றார்.

இந்தச் சந்திப்பில் யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு தலைமை அதிகாரி ரியோனா அஸ்லான்சிவிலுடன் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button