
இலங்கைக் கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தால் நேற்று (08) பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வைத்து கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி நான்கு இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸாரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்றது.
இதன்போது மீன்பிடிப் படகு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அரசுடமையாக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அரசுடமையாக்கப்பட்ட லம்பாடி ரக மீன்பிடி படகு ஒன்று, இரண்டு இலட்சத்து பன்னிரண்டாயிரம் ரூபாவிற்கும், மீன்பிடி வலைகள் ஒரு இலட்சத்து எண்பத்தோராயிரம் ரூபாவிற்கும், இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் அறுபத்து நான்காயிரம் ரூபாவிற்கும், குளிரூட்டல் பெட்டி ஐம்பத்தையாயிரம் ரூபாவிற்கும், இரண்டு ஜி.பி.எஸ்.கருவிகள் நாற்பத்தாறாயிரத்து நூறு ரூபாவிற்கும், நங்கூரம் எட்டாயிரம் ரூபாவிற்குமாக ஐந்து இலட்சத்து அறுபத்தாறாயிரத்து நூறு ரூபாவிற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.