இந்திய மீனவர்கள் எமது கடற்பரப்புக்கள் வராமல் இருப்பதே சிறந்தது – அமைச்சர் சந்திரசேகர்!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது சட்டவிரோதமானது, அவர்கள் எமது கடற்பரப்புக்கள் வராமல் இருப்பதே சிறந்தது. அதை மீறி வந்தால் எமது நாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார் கடற்றொழில் அமைச்சர் இராலிங்கம் சந்திரசேகர்.
யாழ். கச்சதீவு திருவிழாவில் கலந்துகொண்ட பின்னர் உள்ளூர் மற்றும் இந்திய ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத்துரைத்த அவர், கச்சத்தீவு திருவிழா இனிதே நிறைவுபெற்றுள்ளது. வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றிகள்.
கடந்த முறை இந்திய பக்தர்கள் பங்கேற்கவில்லை.இம்முறை பங்கேற்றிருந்தனர். கச்சத்தீவு திருவிழாவை எதிர்காலத்தில் மேலும் சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
இலங்கை, தமிழ் நாட்டு மீனவர் பிரச்சினையென்பது நீண்டகாலமாக நிலவும் பிரச்சினை.
இதற்கான தீர்வு தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டுவருகின்றது.
இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும், சிறையில் அடைக்க வேண்டும் என நாம் நினைக்கவில்லை.
அதற்கான தேவைப்பாடும் எமக்கு கிடையாது. எமது கடல்எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாலும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமையை கடைபிடிப்பதாலுமே கைது செய்யப்படுகின்றனர்.இந்திய மீனவர்கள் இழுவை படகை பயன்படுத்தி அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு கடல்வளத்தை அழித்தால் இந்து சமுத்திரமே பாலவனம் ஆகக்கூடும்.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்கள் இன்னும் மீண்டெழவில்லை. இந்நிலையில் தமிழக மீனவர்கள் அவர்களின் வளங்களை அழிக்க முற்படுவது ஏற்புடையது அல்ல. ” – என்றார்.