காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் மீண்டும் குறைப்பு!

காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பணிகள் படகுச் சேவையின் இருவழிக்கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதோடு,பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக “சுபம்” நிறுவனத் தலைவர் தெரிவித்தார்.
பயணிகள் படகுச் சேவையில் ஈடுபடும் “சுபம்” பயணிகள் படகு நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் நேற்று(01) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சேவை ஆரம்பிக்கும்போது 36 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட இருவழிக்கட்டணம் பின்னர் 30 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டது. இன்று மீண்டும் அது குறைக்கப்பட்டு 28 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் எடுத்துச் செல்லும் பயணப்பொதியின் அளவும் 10 கிலோவிலிருந்து 22 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா மேம்பாட்டிற்காக இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்காக 7 வகையான புதிய சுற்றுலாப் பொதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ,இருவழி படகு போக்குவரத்து கட்டணம் அடங்கலாக 4 நாட்கள் தங்குவதற்கான கட்டணம் ஆக்ககுறைந்தது 70 ஆயிரம் ரூபாவிலிருந்து ஆரம்பமாகிறது.
அத்துடன் அடுத்தமாதம் காங்கேசன்துறையிலிருந்து காலையில் புறப்படக்கூடியதான புதிய சேவையும் ஆரம்பிக்கவுள்ளது. எனவே இச்சேவைகளை பயன்படுத்தி இரு நாடுகளையும் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயனடையவும்” – என்றார்.