அரச அலுவலரின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக 2025 அமையட்டும்!
அரசாங்கப் பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பாக வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று(09) இடம்பெற்றது. இதன்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.
‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் ஜனாதிபதியால் தொடக்கி வைக்கப்பட்டது. அரசாங்கத்தின் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு!
மக்களின் சேவைகளை விரைவாகவும், தரமாகவும், அன்பாகவும் வழங்குவது அரச பணியாளர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு! அந்த மாற்றத்தை அரச பணியாளர்களின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் செய்ய முடியும்.
இந்த நடத்தை மாற்றங்கள் உடனடியாகச் செய்யக் கூடியவை. 2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக மாற்றுவோம் – என்றார்.