
மதுரை திருச்சி டைடல் பூங்கா பணிகளுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை, திருச்சி டைடல் பார்க்:
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ரூபாய் 289 கோடியில் டைடல் பார்க் திட்ட பணிகளுக்கும் திருச்சி பஞ்சபூரில் 315 கோடியில் டைடல் பார்க் திட்ட பணிகளுக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் அதிக அளவில் ஐந்து நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக அரசு சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டைடல் பூங்கா அமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.
தமிழ்நாடு அரசு, சென்னையில் தரமணி, பட்டாபிராம் மற்றும் கோயம்புத்தூரை தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. திருச்சியில் திருச்சிராப்பள்ளி – மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் என்ற இடத்தில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகில் இந்த டைடல் பார்க் அமைக்கப்படுகிறது.
சுமார் 14.16 ஏக்கர் நிலப்பரப்பில் 5.58 லட்சம் சதுரடியில் ரூ.315 கோடியில் இந்த டைடல் பூங்கா அமைகிறது. தரைதளம் மற்றும் ஆறு தளங்களுடன் இந்த புதிய டைடல் பார்க் அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.

அதேபோல், மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 9.97 ஏக்கர் நிலத்தில் 5.67 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பார்க் கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ரூ.289 கோடி செலவில் கட்டப்படும் இந்த டைடல் பார்க்கில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இரண்டு டைடல் பூங்கா பணிகளுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி டைடல் பூங்கா நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. தற்போது, அதனைப் பரிசீலனை செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக டைடல் பூங்காவின் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் மூலம், மதுரை, திருச்சி சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.