மதுரை அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரி நேற்று மதுரை மேலூர் பகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மாபெரும் பேரணி நடத்திய நிலையில் அனுமதி மற்றும் கட்டுப்பாடுகளை மீறி பேரணி சென்றதாக 5000க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு: மதுரை நோக்கி விவசாயிகள் பேரணி
பேரணியின் போது, சுங்கச்சாவடி அருகே போலீசாருக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் முன்னே செல்ல, அவர்கள் அணிவகுப்பை தொடர்ந்து போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர்.
பேரணியின் எதிரொலியாக, மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 5 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது. இந் நிலையில், கட்டுப்பாடுகளை மீறி பேரணி சென்றதாக போராட்டக்காரர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிட்டத்தட்ட 5 ஆயிரம் விவசாயிகள், பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். பேரணியின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை வீடியோ காட்சிகள் மூலம் அடையாளம் காணும் பணியிலும் போலீசார் இறங்கி உள்ளனர்.