பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார்: சுமந்திரன் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆலய வளாகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், “குறித்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தப் பிரச்சினைகளை விசாரிக்கவோ அல்லது நிவர்த்தி செய்யவோ தேர்தல் ஆணையத்திடம் முதுகெலும்பு இல்லை. நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதாகக் கூறிக்கொண்ட அரசாங்கம், ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களுக்குள் இவற்றை வெளிப்படையாக மீறியுள்ளது” – என்றார்.