தவில் வித்துவானின் மகன் பலி: யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற கோர விபத்து!
குறித்த விபத்து வடமராட்சி – வல்லைப் பகுதியில் நேற்றிரவு (08.01.2025) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் யா /நெல்லியடி மத்திய கல்லூரியின் பழைய மாணவனும், தவில் வித்துவானின் மகனுமான இளைஞரே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வேளை வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான் விஜயகுமார் – மணிகண்டன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அச்சுவேலி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.