JaffnaSrilanka News

பொதுத்துறைக்கு உயர்தர மருந்துகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சர்!

பொதுத்துறைக்கு உயர்தர, தரப்படுத்தப்பட்ட மருந்துகளை தொடர்ந்து வழங்குவதையும், அத்தகைய மருந்துகள் திறந்த சந்தையில் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதையும் உறுதி செய்துள்ளதாக  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மருந்துகள் தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் தேசிய மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டுக் குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “இந்த நாட்டிலுள்ள அரச மருத்துவமனைகளுக்கு உயர்தரத்திலான தரப்படுத்தப்பட்ட மருந்துகளை வழங்குதல் மற்றும் அத்தகைய மருந்துகளை திறந்த சந்தையில் நியாயமான விலையில் வழங்குவது குறித்த வழிகாட்டலை வழங்கும் பிரதான பொறுப்பு, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழுள்ள தேசிய மருந்துகள் தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் தேசிய மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டுக் குழுவிற்கு ஒப்படைப்பட்டுள்ளது.

நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒரு குறிப்பிட்ட அளவு இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தால் தயாரிக்கப்படுகிறது, மீதமுள்ளவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, இந்த இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் சிலவற்றிலிருந்து மருந்து நிறுவனங்கள் அதிகளவில் இலாபம் ஈட்டியுள்ளன. நாட்டில் சில சந்தர்ப்பங்களில் மருந்து மாபியா ஒன்று இயங்கியுள்ளது.

இந்த இரண்டு குழுக்களிலும் சுகாதாரத் துறை மற்றும் அவர்களின் தொழில் குறித்து நல்ல அறிவைக் கொண்ட நிபுணர்களை உறுப்பினர்களாக நியமிப்பதன் முதன்மை நோக்கம், மருந்துத் துறையில் இதுபோன்ற முறையற்ற நடைமுறைகள் இடம்பெறுவதற்கு இடமளிக்காமல் இருப்பதை உறுதி செய்வதாகும். எதிர்காலம் குறித்து இந்த விடயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button