
சென்னை: தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சுற்றுலா தலங்களில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.
சென்னை மெரினா கடற்கரையில் நேற்று காலையில் இருந்தே குடும்பம் குடும்பமாக மக்கள் திரளத் தொடங்கினர். மாலையில் கடற்கரை முழுவதும் மக்கள் வெள்ளம் காட்சியளித்தது. இதேபோல, கிண்டி சிறுவர் பூங்கா, பாம்பு பண்ணை, தீவுத்திடலில் நடைபெறும் 49-வது இந்திய சுற்றுலா பொருட்காட்சி, வண்டலூர் உயிரியல் பூங்கா, மாமல்லபுரம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் திரண்டனர்.

புதுச்சேரி கடற்கரை, சின்னவீராம்பட்டினம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆரோவில், விழுப்புரம் பெண்ணையாற்று நீர் நிலை, செஞ்சிக் கோட்டை, வீடூர் அணை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் உற்றார், உறவினர்களுடன் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடினர்.
திருச்சியில் முக்கொம்பு, ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லணை, தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, தரங்கம்பாடி, பூம்புகார் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. வேளாங்கண்ணியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் 3,600-க்கும் மேற்பட்டோர் குளித்து மகிழ்ந்தனர். ஈஷா யோகாமையத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றை தரிசித்தனர். பொள்ளாச்சி டாப்சிலிப், வால்பாறை கவியருவி, திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி, உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.

குற்றாலம் அருவிகள், பாபநாசம் அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அணை பூங்கா, களக்காடுதலையணை, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, திற்பரப்பு அருவி, வட்டக்கோட்டை, தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரை, மணப்பாடு கடற்கரை, திருச்செந்தூர் முருகன் கோயில், பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.