அயல் வீட்டாரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் உதயங்க வீரதுங்கவை இன்று(10) ஆஜர்ப்படுத்தியபோது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உதயங்க வீரதுங்கவின் தாக்குதலுக்கு இலக்கான, அயல் வீட்டு நபர் தற்போது ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளானவர் 66 வயதான லியனகே சரத் சந்திரசிறி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நுகேகொடை, தலபத்பிட்டிய, கனத்த வீதியில் வசிக்கும் உதயங்க வீரதுங்கவின் அயல் வீட்டாராவார்.
வீட்டுக் காணியின் எல்லைச் சுவரை உடைப்பது தொடர்பான வாக்குவாதத்தின் போது நேற்று (09) இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நபரை, உதயங்க வீரதுங்க பிளாஸ்டிக் குழாயால் தாக்கியுள்ளார், இதன் விளைவாக பாதிக்கப்பட்டவரின் முகத்தில் பலத்த காயங்களும் மூக்கும் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உதயங்க வீரதுங்கவின் தாக்குதல் சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவிலும் பதிவாகியுள்ளது.