கொலை செய்யப்பட்ட சித்தமருத்துவபீட சமூகநலத்துறை தலைவரின் பூதவுடல் நல்லடக்கம்: சந்தேக நபர்களுக்கு இரண்டாம் திகதிவரை விளக்கமறியல்!

கொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவத்துவபீட சமூக நலத்துறை தலைவர் தயாநிதி திலீபனின் இறுதிக் கிரியைகள் இன்று(22) இடம்பெற்றன.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணைகளையடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து யாழ்.பாண்டியன்தாழ்விலுள்ள இல்லத்தில் இறுதித் கிரியைகள் இடம்பெற்றன.

பின்னர் கைதடியில் அமைந்துள்ள சித்தமருத்துவ பீடத்தில் அமரர் தயாநிதி திலீபனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வில், யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் யாழ்.கோம்பயன் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதேவேளை, கொலைச் சந்தேக நபர்களான மகள் மற்றும் மருமகன் ஆகியோரை யாழ்.பதில் நீதவான் வாசல்தலத்தில் இன்று(22) ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version