அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தை தற்காலிக இடை நிறுத்தம்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளதாக ஈரான் அரசாங்கம் இன்று(12) அதிகாலையில் அறிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பாகிஸ்தானில் நடைபெற்றது.

இந்த நிலையில் பேச்சு வார்த்தை தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளதாக ரொயிட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைபெற்ற முதல் நேரடி அமெரிக்க-ஈரானிய சந்திப்பாக கருதப்படுகிறது.

அத்துடன், 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நடைபெற்ற மிக உயர்ந்த மட்டத்திலான கலந்துரையாடலும் இதுவாகும்.

இந்தநிலையில், 14 மணி நேர பேச்சுக்கள் முடிவுக்கு வந்தெள்ளதாகவும், இரு தரப்பு தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வார்கள் என்றும் ஈரான் அரசாங்கம், தமது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளது.

சில வேறுபாடுகள் எஞ்சியிருந்தாலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அந்தப் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அவை எப்போது மீண்டும் தொடங்கும் என்று அது குறிப்பிடவில்லை.

இதற்கிடையில், பேச்சுவார்த்தைகள் இன்று ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும், பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டனவா, மேலும் ஏதேனும் வேறுபாடுகள் எஞ்சியுள்ளனவா என்பது குறித்து அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம் இன்னும் கருத்து வெளியிடவில்லை.

இதற்கிடையில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஈரானிய தூதுக்குழுவினர் கறுப்பு உடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version