எரிபொருள் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை பாதுகாப்பு வழங்கும் - அமெரிக்க ஜனாதிபதி உறுதி!
ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் எரிபொருள் தாங்கிக் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை நேரடிப் பாதுகாப்பை வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதியளித்துள்ளார்.
ஈரானின் கடல்வழித் தடையை முறியடித்து, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை உறுதிப்படுத்த அமெரிக்கா இத்தகைய பாரிய இராணுவ நகர்வை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எரிபொருள் கப்பல்களுக்கு அமெரிக்கக் கடற்படை மிக விரைவில் பாதுகாப்பு வழங்கத் தொடங்கும் எனவும், எத்தகைய சூழலிலும் உலகிற்கான எரிசக்தி விநியோகம் தடையின்றி கிடைப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தும் எனவும் அவர் அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களில் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 15 சதவீதத்தால் உயர்ந்துள்ளது.

ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியுள்ளதாலும், வளைகுடா நாடுகளிலுள்ள எரிசக்தி கட்டுமானங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாலும் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விலை உயர்வைத் கட்டுப்படுத்தி உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் எரிபொருள் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை டிரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



