மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழலில் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டால், அது ஈரானுக்கு எதிரான நேரடிப் போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகாய் (Esmail Baghaei) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் இதன்போது கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களுக்கு ஐரோப்பிய நாடுகள் எவ்விதத்திலாவது துணை நின்றால், அதனை ஈரான் தனது இறையாண்மை மீதான நேரடிப் போர் நடவடிக்கையாகவே கருதும் எனவும், அத்தகைய சூழலில், ஈரானின் பதிலடி அமெரிக்காவோடு மட்டும் நின்றுவிடாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் அண்மையில், தமது பிராந்திய நலன்கள் மற்றும் இராணுவத் தளங்களைப் பாதுகாப்பதற்காக, ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மீது தற்காப்பு ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தன.
இந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பிற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்,ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகாய், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



