தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர தயார் – மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்தல்!


யாழ்.தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயாராகவுள்ளோம். ஆனால் சட்டத்துக்கு முரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்கவேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துரைத்த அவர்,”தையிட்டி விகாரையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைக்கப்பட்ட விடயம் குறித்தே மக்கள் போராடுகின்றனர்.

கடந்த அரசுகள் போன்று அனுர அரசும் இனவாதத்தை தொடர்ந்தும் பேசாமல், அதைத் தடுக்க நாடாளுமன்றில் சட்டம் இயற்றி நடைமுறையாக்க வேண்டும்.

மேலும், நாட்டில் தற்போது எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலும் கிடையாது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேலும் நாட்டுக்குத் தேவையற்ற ஒன்றாக இருக்கின்றது.

அனுர அரசு ஆட்சிகு வரும்போது கூறிய விடையங்கள் ஒன்று, இன்று செயற்படுத்துவது இன்னொன்றாக இருக்கிறது.

திஸ்ஸ விகாரை, செம்மணி விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு தருவோம் என்றார்கள். ஆனால் அவை அனைத்தும் இன்று காணாமல் போய்விட்டது.

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் வந்து அச்சமின்றி பாதுகாப்பின்றி நடந்து செல்ல ஜனாதிபதியால் முடியுமாக இருந்தால் இன்னும் எதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் இருகின்றது. எதற்காக அதற்கு மாற்றீடான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்” – என்றார்.

Exit mobile version