யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சிமுற்றவெளியில் ஆரம்பம்!

‘யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’, 16 ஆவது ஆண்டாக இம்முறையும் மிகச் சிறப்பாக இடம்பெற்றுவருகிறது.

கண்காட்சியின் தொடக்க விழா நிகழ்வுகள், யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் இன்று(23) காலையில் நடைபெற்றன.

யாழ்ப்பாண வணிக மற்றும் கைத்தொழில் மன்றம், லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கண்காட்சியின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, விருந்தினர்கள் மங்கள வாத்தியங்கள் இசைக்க யாழ். முற்றவெளி மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அங்கு கண்காட்சிக் கூடங்கள் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் வர்த்தகக் கூடங்களைப் பார்வையிட்டனர்.

400 இற்கு மேற்பட்ட வர்த்தகக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை கண்காட்சியின் சிறப்பம்சமாகும்.

இந்த ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய்முரளி, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அர்ஜுன் தர்மதாச மற்றும் பணிப்பாளர் ஏ.எப்.எம். பாரூக்,

யாழ்ப்பாண வணிகர் மற்றும் கைத்தொழில் மன்றத்தின் தலைவர் குலசிங்கம் வசீகரன், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கே.விக்னேஷ், லங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டுச் சேவைகள் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் இமால்கா முல்லேகம ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

இந்த வர்த்தக கண்காட்சி இன்று, நாளைமற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version