யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு தேவை:

போராட்டத்தில் ஈடுபட்ட விளையாட்டு ஆர்வலர்கள்!

யாழ்ப்பாணம் – பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் எனக்கோரி போராட்டம் ஒன்று இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் பழைய பூங்கா வளாகத்தில் அண்மையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நாட்டப்பட்டது.

இந்த நிலையில் யாழ்.பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்பட்டால், இயற்கை வளங்கள் அழிவடையும் எனத் தெரிவித்து இயற்கை ஆர்வலர்களால் யாழ்.நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) இடைக்கால தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அவசியம் என்பதை வலியுறுத்தி விளையாட்டு வீரர்கள், விளையாட்டுத்துறை பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் இணைந்து இன்று(08) பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

சென்.போஸ்கோ ஆரம்ப பாடசாலை முன்பாக கூடிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து பேரணியாக பழைய பூங்கா பகுதிக்கு சென்று அப்பகுதியை பார்வையிட்டதோடு, அங்கிருந்து யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு போரணியாக சென்று ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் கையளித்தனர்

.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version