காற்றழுத்த தாழ்வு மண்டலம் விலகிச் செல்கிறது: கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்தும் நிலவி வருகின்றது.

எனினும், அடுத்த 36 மணித்தியாலங்களுக்குள் இது இலங்கையை விட்டு விலகிச் சென்று படிப்படியாக பலவீனமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மற்றும் மழை வீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலுக்கு செல்வோர் வானிலை அறிக்கைகள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசும். சாதாரண நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 25 தொடக்கம் 35 கிலோ மீற்றராக காணப்படும்.

காங்கேசன்துறை முதல் புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

காங்கேசன்துறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகள் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கலாம்.

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 தொடக்கம் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதோடு அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version