சாவகச்சேரியில் பட்டாசு வெடிக்க தடை!

யாழ்.சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட நகர் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6 ஆவது மாதாந்த அமர்வு நேற்று(24) இடம்பெற்றது.

இதன்போது நகர் பகுதியின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில், இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதால் பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு அருகிலுள்ள வர்த்தக நிலையங்களில் தீ பரவும் அபாயம் மற்றும் நகர் பகுதிகள் அசுத்தமடைவதாக உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதில் வழங்கிய தவிசாளர் ஸ்ரீபிரகாஸ், “மயானத்திற்கான அனுமதி வழங்கும் போது நகர் பகுதிக்குள் பட்டாசு வெடிப்பதற்கு தடை என குறிப்பிட்டு எழுத்து மூல அறிவுறுத்தல் வழங்கப்படுகின்றது.

இருப்பினும் யாரும் பின்பற்றப்படுவதில்லை. ஆனால் இன்று முதல் இந்த நடைமுறை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும். மீறுபவர்களுக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குறிப்பிட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version