மே மாதம் வரை தடையின்றி எரிபொருட்களை வழங்க முடியும்: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!

நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்பு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட இறக்குமதிகளின் அடிப்படையில், மே மாதம் வரை தடையின்றி எரிபொருளை வழங்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது சுமார் 134 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் கையிருப்பில் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் முற்பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் மூலம் மேலும் 124 ஆயிரம் மெட்ரிக் தொன் கிடைக்கவுள்ளது.

இதன்படி, மே மாதம் இரண்டாம் வாரம் வரை போதுமான டீசல் கையிருப்பு உள்ளது.

தற்போது கையிருப்பிலும் வரவுள்ள கப்பல்களிலும் சேர்த்து 151 ஆயிரத்து
450 மெட்ரிக் தொன் 92 ரக பெட்ரோல் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மேலதிகமாக 55 ஆயிரத்து 300 மெட்ரிக் தொன் வரவுள்ளது.

இதன் மூலம் மே மாதம் மூன்றாவது வாரம் வரை பெட்ரோல் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.

சுப்பர் டீசல் மற்றும் பெட்ரோல் 95 ஆகியவையும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் கொள்வனவுக்கான விலைமனு நடைமுறைகள் குறித்து அமைச்சர் மேலும் தெளிவுபடுத்தினார்,

மார்ச் 17ஆம் திகதி திறக்கப்பட்ட விலைமனு மூலம் ஏப்ரல் மாதத்திற்கான டீசல், பெட்ரோல் மற்றும் ஜூன் மாதத்திற்கான மசகு எண்ணெய் தொகுதிகள் பெறப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்களின் சில கப்பல்கள் மற்றும் அரசாங்கத்தின் ஒரு மசகு எண்ணெய் கப்பல் இரத்து செய்யப்பட்டதால், ஏப்ரல் மாதக் கொள்வனவை உறுதிப்படுத்த புதிய விலைமனு ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

Exit mobile version