
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் ஒருவர் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று(30) காலையில் இடம்பெற்றுள்ளது.
கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன் பிரகாரம் இன்று(30) பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர்,தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி பயணித்த வேளையில், திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் அடங்கிய குழுவினர் அவர்களை இடைமறித்து பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர்.
தாக்குதலாளிகளிடம் இருந்து உயிரை காக்க வாள் வெட்டு காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீற்றர் தூரம் ஓடி சென்றவரை தாக்குதலாளிகள் துரத்தி துரத்தி வெட்டியுள்ளனர்.
ஓடி சென்றவர் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக விழுந்த போது, துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வாள் வெட்டுக்களை மேற்கொண்டதில், இளைஞனின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டாட்டப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு,நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இருந்தபோதிலும், வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முன்பகை காரணமாகவே கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் தாக்குதலாளிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



