
இலங்கையைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத்தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow(நாளைய தாவரங்கள்) Categoryயில் சர்வதேச வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு உலகின் 68 நாடுகளிலிருந்து வந்த திறமையான இளைஞர் போட்டியாளர்கள் மத்தியில், அனுசனின் சமூகத்தையும் சூழலையும் மேம்படுத்தும் முயற்சிகள் தனித்துவமாக வெளிப்பட்டன.
இந்த வெற்றி, ஒரு சாதாரண அங்கீகாரமாக அல்ல; இது ஒரு இளம் செயற்பாட்டாளரின் சுற்றுச்சூழல் கடமையைப் பூர்த்தி செய்யும் உறுதியின் சர்வதேச அங்கீகாரம் ஆகும்.
அனுசன் முன்னெடுத்த யாழ்ப்பாண கண்டல் தாவர மீள்நடுகைத் திட்டம் கடற்கரை சூழலை மீட்பதோடு, சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான முயற்சியாகும்.
திட்டத்தின் மூலம் கடற்கரை கண்டல் தாவரங்கள் பாதுகாக்கப்பட்டதோடு, சமூகத்தினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, செயல்பாடுகளில் நேரடியாக பங்களித்துள்ளனர்.
இந்த சாதனை, இலங்கையின் பசுமை சூழல் மற்றும் சமூக நீடித்த வளர்ச்சியை உலகளாவிய அளவில் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
குறிப்பாக, இளம் மாற்றத்தலைவர்களின் செயல்பாடுகளை பாராட்டும் QS ImpACT Summit 2025, லண்டனில் அதிகாரப்பூர்வமாக வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த அங்கீகாரம், அவருடைய பணிக்கு மட்டும் அல்ல, அவருடன் இணைந்து பணியாற்றிய தன்னார்வலர்களின் வலிமையான முயற்சிக்குரிய அங்கீகாரமாகும்.
இந்த வெற்றி, இலங்கையின் இளைஞர்களுக்கான சர்வதேச அளவிலான ஒரு மிகப்பெரிய அங்கீகாரமும், உலகளாவிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் இலங்கையின் பங்கு வெளிப்படுத்தும் வாய்ப்பும் ஆகும்.
இளம் தலைமுறையினர் மூலம் இயற்கை மீட்பு, சமூக விழிப்புணர்வு மற்றும் நிலைத்த வளங்கள் பாதுகாப்பில் எடுத்துவரப்படும் மாற்றங்களை ஊக்குவிப்பதில் இது ஒரு முக்கியமான கட்டமாகும்.



