கன்னியாவிலுள்ள பிள்ளையார் கோவில் சிதைவுகளை பார்வையிட்ட சுமந்திரன்!

திருகோணமலை, கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதிக்கு வருகைதந்த தமிழரசுக் கட்சியின் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், அங்குள்ள பிள்ளையார் கோவிலின் சிதைவுகளையும், பௌத்த விகாரையின் கட்டுமாணங்களையும் இன்று(04) பார்வையிட்டார்.

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வுப்பணி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆலயத்தின் அறங்காவலரும் தர்மகர்த்தாவுமாகிய கோகிலரமணியுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதன் போது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் சென்றிருந்தார்.

குறித்த காணியில் விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அதனை நிறுத்தக் கோரும் விண்ணப்பம் உள்ளிட்ட பல விண்ணப்பங்களைக் கோரி குறித்த காணியின் உரிமையாளரும், பிள்ளையார் ஆலயத்தின் அறங்காவலருமான கோகிலரமணி என்பவரால் திருகோணமலை மேல் நீதிமன்றில் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதியன்று வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

குறித்த வழக்கில், பிள்ளையார் கோவிலை குறித்த பகுதியில் இருந்து சற்று தொலையில் வழங்கப்படுகின்ற 10 பேர்ச் காணியில் பிள்ளையார் சிலையை அமைக்கலாம் என்ற நிபந்தனை உள்ளடங்கலாக 6 நிபந்தனைகளுடன் 2021 ஆண்டு மார்ச் மாதம் 19 ஆம் திகதி இணக்கப்பாடு காணப்பட்டிருந்தது.

Exit mobile version