
அடுத்துவரும் 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணமும்,72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணமும் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக புவியியற்றுயை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவுறுத்தியுள்ளார்.
இன்று(09) காலை 8.30 மணியளவில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது மட்டக்களப்புக்கு கிழக்காக 116 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.
அதன் வெளிவலய முகில்கள் கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை தொட ஆரம்பித்துள்ளன.
கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை பதிவாக தொடங்கியுள்ளது. காற்றும் வேகமாக வீசத் தொடங்கியுள்ளது.
ஆகவே அடுத்த வரும் 48 மணித்தியாலங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், 72 மணித்தியாலங்கள் வடக்கு மாகாணத்திற்கும் முக்கியமானவை.
எனவே கனமழை, வேகமான காற்று வீசுகை தொடர்பாக தயவு செய்து மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்” – என்றுள்ளது.



