தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!

தமிழீழக் கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாஎதிர்ப்பதால், அவர் எங்களது மேடைகளில் இருப்பதில் எந்தவொரு தவறும் இல்லை என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஊடகங்கள் வினவிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் இராமநாதன் அர்ச்சுனா கலந்துகொண்டு உரையாற்றினார்.

அதன்போது,தான் புலிகளை ஆதரித்த ஒருவராக இருந்தபோதிலும், தமிழீழம் அமையப் பெறுவதை ஒருபோதும் விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, தமிழீழத்தை விரும்பிய யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தற்போது தங்களது மேடையில் ஏறி, ஒருபோதும் ஈழம் கேட்க மாட்டேன் என்றும் மக்களின் ஒற்றுமையே முக்கியம் என்றும் கூறும் போது அவரை நாங்கள் ஆதரிப்போம்.

அவ்வாறான எண்ணம் கொண்டவர்களைத் தொடர்ந்து தங்களது மேடைகளில் வைத்திருப்பது அவசியம் ” எனவும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இதன்போது குறிப்பிட்டார்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version