யேமன் நாட்டு கப்பல் மீது செங்கடலில் வைத்து தாக்குதல்!

யேமன் நாட்டின் செங்கடல் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிகச் சரக்குக் கப்பல் ஒன்று, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பிரித்தானிய கடற்படை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய கடற்படையின் கீழ் இயங்கும் யுனைடெட் கிங்டம் மெரிடைம் ட்ரேட் ஆபரேஷன்ஸ் அமைப்பு,நேற்று(05) இந்தத் தாக்குதல் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது

ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள யேமனின் முக்கிய துறைமுக நகரமான ஹொடைடாவுக்கு தென்மேற்கே சுமார் 30 கடல் மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பல், தாங்கள் “அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளோம்” என தெரிவித்து அவசர அபாய எச்சரிக்கையை விடுத்ததாக UKMTO கூறியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம், கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் பணியாளர்களின் நிலை தொடர்பாக சர்வதேச கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு ஆயுதக் குழுவும் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version