தொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படும் - நுணாவில் ஐ.ஓ.சி. உரிமையாளர் தெரிவிப்பு!
விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் பிரதேச செயலரின் உறுதிப்படுத்தலோடு வருகை தந்தால் அவர்களின் தொழில் நடவடிக்கைக்கு தேவையான எரிபொருட்கள் கொள்கலன்களில் வழங்கப்படுமென சாவகச்சேரி நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் கலாநிதி வைத்திலிங்கம் சிவராசா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்; “தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவருகின்ற பதற்ற நிலைமையால் பொது மக்கள் எரிபொருட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் விவசாயம் மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும், ஜெனரேட்டர் போன்ற இயந்திரங்களை பயன்படுத்தி தொழில்களில் ஈடுபடுபவர்களும் தங்களுடைய தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான எரிபொருட்களைப் பெறமுடியாத நிலைமை தோன்றியுள்ளது.
எனவே, அவர்களுடைய தொழில் நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு சாவகச்சேரி நுணாவிலில் அமைந்துள்ள எமது ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையம், அவர்களுடைய தொழில் நடவடிக்கைக்கு தேவையான எரிபொருட்களை கொள்கலன்களில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
மேற்குறித்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் எந்த பிரதேச செயலகப் பிரிவில் வசித்தாலும், தங்களது பிரிவுப் பிரதேச செயலரின் உறுதிப்படுத்தலுடன் வருகைதந்தால் அவர்களுக்குத் தேவையான எரிபொருட்களை வழங்குவோம்” – என்றார்.



