உலகக் கிண்ண தேர்வுப் போட்டிக்காக மெக்சிகோ செல்கிறது, ஈராக் உதைபந்தாட்ட அணி!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்துள்ள போதிலும், உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டியில் விளையாடுவதற்காக ஈராக் தேசிய உதைபந்தாட்ட அணி, மெக்சிகோவிற்குப் பயணம் செய்யவுள்ளது.
ஈராக் தேசிய உதைபந்தாட்ட அணி, இந்த வார இறுதியில் தனியார் விமானம் மூலம் மெக்சிகோவிற்குப் பயணிக்கும் என, ஈராக் உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் அட்னான் திர்ஜால் தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் நிலவும் மோதல் காரணமாக வர்த்தக ரீதியிலான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், விமானப் போக்குவரத்துச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், வீரர்களின் பயணத்தை உறுதிப்படுத்துவதற்கும் ஈராக் உதைபந்தாட்ட சங்கம் சர்வதேச உதைபந்தாட்ட சங்கத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உலகக் கிண்ணக் கனவைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தகுதிகாண் போட்டி, எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி மெக்சிகோவின் மொன்டேரி நகரில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஈரான் உதைபந்தாட்ட அணி இம்முறை உலக கிண்ணப் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சர்வதேச உதைபந்தாட்ட சங்கத்துக்கு இது தொடர்பாக உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே ஈரான் அணிக்குப் பதிலாக எந்த அணியை இணைத்துக்கொள்ளது என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.



