
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருந் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருந் திருவிழா,
எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
யாழ்.மாவட்ட செயலகத்தின் ஒருங்கிணைப்பில், யாழ்.ஆயர் இல்லம், இலங்கை கடற்படை, யாழ்.இந்திய துணைத் தூதரகம், நெடுந்தீவு பிரதேச செயலகம், நெடுந்தீவு பிரதேச சபை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஆயத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
அதற்கமைய,27 ஆம் திகதி காலை 4.00 மணி தொடக்கம் பி.ப 01.00 மணி வரை அரச பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும்.
கச்சதீவுக்கான படகுச் சேவையானது குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து 27 ஆம் திகதி காலை 5.00 மணி முதல் பி.ப 02.00 மணி வரை இடம்பெறும்.
குறிகட்டுவானில் இருந்து பயணிக்கும் நபர் ஒருவருக்கான ஒரு வழி படகுக் கட்டணம் 1200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவிற்கு குழுவாக தனியாக படகில் செல்லும் பக்தர்கள் தங்களது விவரங்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.
வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப் படகுகளில் வருகைதரவுள்ளவர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள கடற்படை முகாமில் உரிய கடற் பயணப் பாதுகாப்பு அனுமதியைப் பெற்றுக்வகொள்வதோடு, 27 ஆம் திகதி பி.ப 4.00 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைதல் வேண்டும்.



