
ஈழத்துப் புகழ் பூத்த யாழ்.சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் முதலாம்(01) திகதி இடம்பெறவுள்ளது.
கும்பாபிசேகம் காலை 9.30 மணி முதல் 11.46 மணி வரையான சுபவேளையில் இடம்பெற்று, தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு கிரியாரம்ப நிகழ்வு நாளை 28 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து 31 ஆம் திகதி, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை எண்ணெய் காப்பு வைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
கும்பாபிஷேக பெருவிழாவை சிவஸ்ரீ சி.சோதிரத்தினக் குருக்கள் நிகழ்த்தவுள்ளார்.
சோழர் காலத்தில் கட்டடக்கலை அம்சங்களோடு சிறப்புற்று விளங்கிய சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவனாலயத்தின் எல்லைக் கோயிலாக கொண்டு கிராமிய தெய்வமாக முத்துமாரி அம்மன் அருள் பாலித்து வந்தார்.
பிற்காலத்தில் போர்த்துக்கேயரால் சாவகச்சேரி வாரிவனேஸ்வரர் சிவனாலயம் அழிக்கப்பட்டபோது விக்கிரகங்களை குளங்களுக்குள் போட்டும், மண்ணில் புதைத்தும் சைவப் பெரியார்கள் வைத்தனர்.
அவ்வாறு புதைத்து வைக்கப்பட்டு பின்னாளில் புளியம் மரத்தடியில் காட்சி கொடுத்து, இற்றை வரையும் பக்தர்கள் வேண்டுவன எல்லாவற்றையும் கொடுத்து அருள் பாலித்து வருகிறாள் முத்துமாரி அம்மன்!



