‎‎தென்னாபிரிக்காவை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி!

​​​​​​T20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை, 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி நியூசிலாந்து அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்றிரவு (04) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, ஆரம்பத்தில் சில விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய மார்கோ ஜான்சன் 54 ஓட்டங்களையும், டெவால்ட் ப்ரீவிஸ் 34 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினர்.

அதனடிப்படையில், தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, ஆரம்பம் முதலே தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான பின் ஆலன்,
33 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றார். மேலும் அவர் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்று T20 தொடரில் சாதனை படைத்தார்.

அவரது இந்த அதிரடி ஆட்டத்துடன் நியூசிலாந்து அணி, 12.5 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பெற்று பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version