ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து மீண்டும் விசாரிக்க மேல்நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கின், முந்தைய தீர்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணை நடத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்றைய தினம்(26) பிறப்பிக்கப்பட்டுள்ளது.


உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரால் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டை விசாரித்த, நீதிபதிகள் பி.சசிமகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர், இந்த உத்தரவைப் பிறப்பித்தனர்.
அந்த உத்தரவில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மூன்று கடற்படை உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட முந்தைய விடுதலையை ரத்து செய்து
வழக்கை மறுபடியும் விசாரிக்க வேண்டும்.

வழக்கில் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சட்ட நடைமுறைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும் என மேல் முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ், 2006 ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி கொழும்பில் வைத்து ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



