
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானிக்கும் இடையிலான சந்திப்பு கடற்றொழில் அமைச்சில் இன்று(03) இடம்பெற்றது.
இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து கடற்றொழில் மற்றும் மீன்வளத் துறைகளை நவீனமயப்படுத்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு, முதலீட்டு விரிவாக்கம் மற்றும் அறிவு பரிமாற்றம் போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்த சவூதி அரேபியா முன்வந்துள்ளதாக தூதுவர் இதன்போது தெரிவித்தார்.


சவூதி அரேபியாவின் “Vision 2030” தொலைநோக்கு திட்டத்தின் கீழ், மீன்வளர்ப்பு, மீன்வள மேலாண்மை, கடல் ஆராய்ச்சி மற்றும் நீரியல் வள மேம்பாட்டுத் துறைகளில் சவுதி அரேபியா பெற்றுள்ள முன்னேற்றத்தை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராட்டினார்.
மேலும் இதன்போது, மீன்வளர்ப்பு மேம்பாடு, நவீன தொழில்நுட்ப பரிமாற்றம், இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு, மீன்வள உயிரியல் பாதுகாப்பு மற்றும் தீவன உற்பத்தி, வடிவமைப்பில் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.


இந்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் பி.கே. கோலித்த கமல் ஜினதாச, சவூதி அரேபிய தூதரகத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்



