
அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டில் அடக்குமுறை நிலவுவதாக எதிர்க்கட்சிகள் சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இன்று(06) இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தை விமர்சிப்பதற்கோ அல்லது போராட்டங்களை நடத்துவதற்கோ ஜனநாயக உரிமையின் மீது எவ்விதத் தடைகளும் விதிக்கப்படவில்லை எனவும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அடக்குமுறை என்பதை வெறும் சொல்லாக மாத்திரம் உச்சரிக்காது, கடந்த மூன்று மாதங்களில் அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் எவராவது கைது செய்யப்பட்டிருந்தால் அல்லது அடக்குமுறைக்கு உள்ளாகியிருந்தால் அதனைச் சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
சமூக ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் வாயிலாக அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் கடுமையாக விமர்சிக்கும் சம்பவங்கள் இடம்பெற்ற போதிலும் எவ்வித அடக்கு முறைகளும் பிரயோகிக்கப்படவில்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலையின் பின்னர் மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அவசரகாலச் சட்ட ஒழுங்குவிதிகள் தேவைப்படுகின்றன எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.



