இலங்கைஉலகம்
Trending

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - ஜனாதிபதி உறுதி

நாட்டில் எரிபொருள்
தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் நேற்று(20) ஆற்றிய விசேட உரையின்போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு, ‘உடனடி கொள்வனவு’ முறையே பிரதான காரணமாக இருந்தது.

இதனைத் தவிர்க்கவே, தாம் ஆட்சிக்கு வந்தவுடன் நீண்டகால விலைமனு மற்றும் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் மற்றும் இந்திய நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகத்தில் எவ்வித நெருக்கடியும் இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, மசகு எண்ணெய் இறக்குமதியிலேயே சிறு தாமதம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

புஜேரா (Fujairah) துறைமுகத்தில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக, மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த 90 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பலின் வருகை பிற்போடப்பட்டுள்ளது.

மற்றொரு தனி விலைமனு மூலமான 90 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கப்பலும் கிடைக்கப்பெறவில்லை.

இந்தக் மசகு எண்ணெய் தட்டுப்பாட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க, மார்ச் 5 ஆம் திகதி அவசர விலைமனு ஒன்று கோரப்பட்டது.

மார்ச் 17 அன்று திறக்கப்பட்ட இந்த விலை மனு மூலம் டீசல், பெட்ரோல் மற்றும் ஏனைய எரிபொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான மசகு எண்ணெய் விலைமனு எவரும் விண்ணப்பிக்காத நிலையில், மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.

சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை அதிகளவில் இறக்குமதி செய்வதன் மூலம் மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் தேவைகள் தடையின்றி பூர்த்தி செய்யப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது உறுதி அளித்தார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button