யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலை: மகளும் மருமகனும் கைது!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் அவரது மகளின் கணவரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சடலம் யாழ்.சாவகச்சேரி, தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் இன்று(21) கண்டுபிடிக்கப்பட்டது.

54 வயதுடைய திலீபன் தயாளினி என்ற விரிவுரையாளரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோருக்கிடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் விரிவுரையாளரான தனது தாய் மற்றும் தங்கையை தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவைரையாளரின் மகன் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்து விசாரணைக்காக யாழ்.பொலிஸார், பாண்டியன்தாழ்வில் அவர்களது வீட்டிற்கு சென்றனர்.

அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி ஆதாரங்களும் காணப்பட்டன.

அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியிலுள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில், அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதற்கமைய நேற்றையதினம்(20) திருகோணமலை பகுதியில் வைத்து விரிவுரையாளரின் 19 வயதுடைய மகள் மற்றும் 21 வயதுடைய மருமகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அவர்களைக் கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், விரிவுரையாளரான குறித்த பெண்ணை மருமகன் கழுத்து நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலமளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், யாழ். தனங்கிளப்பு, அறுகுவெளி பகுதியிலுள்ள புதருக்குள் வீசப்பட்டிருந்த சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது.

சடலத்தை சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதிவான் சடலத்தைப் பார்வையிட்டதோடு, உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டார்.

Exit mobile version