
லெபனானில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஊடகவியலாளர்கள் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பெய்ரூட்டை தளமாகக் கொண்ட தொலைக்காட்சியின் செய்தியாளர் பாத்திமா பெடோனி மற்றும் ஒளிப்பதிவாளர் முகமது பெடோனி ஆகியோரும்,
ஹிஸ்புல்லா அமைப்பின் அல் மனார் தொலைக்காட்சியின் செய்தியாளர் அலி சுஐப் என்பவரும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
ஊடகவியலாளர் அலி சுஐப்பின் மரணத்தை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பாதுகாப்புப் படை, அவர் “ஊடகவியலாளர் என்ற போர்வையில்” செயற்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர் என குற்றஞ் சாட்டியுள்ளது.
இஸ்ரேலின் இந்தக் குற்றச்சாட்டை ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு, வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஊடகவியலாளர்கள் எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் அவர்கள் இராணுவ இலக்குகள் அல்ல என வலியுறுத்தியுள்ளது.
நம்பகமான ஆதாரங்களை வழங்காமல் ஊடகவியலாளர்களைப் பயங்கரவாதிகள் அல்லது போராளிகள் எனக் குற்றம் சாட்டுவது இஸ்ரேலின் ஒரு “கவலைக்குரிய நடைமுறையாக” மாறியுள்ளதாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழுவின் பிராந்திய பணிப்பாளர் சாரா குடா தெரிவித்துள்ளார்.



