
நீதித்துறையில் நிலவும் கட்டமைப்புச் சிக்கல்கள், வழக்குகளின் தேக்கம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் காணப்படும் பணி வெற்றிடங்கள் குறித்து அவசரமாக விவாதிக்குமாறு கோரி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று(23) கடிதமொன்றைக் கையளித்துள்ளனர்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 19(1) இன் கீழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில், “அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதித்துறை பணி வெற்றிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதம், நிறுவனங்களின் திறமையான மற்றும் சுதந்திரமான செயல்பாடுகளில் கடுமையான நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியுள்ளதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வழக்குகள் தேங்கிக் கிடப்பதும், விசாரணைகள் நீண்ட நாட்களுக்குத் தாமதமாவதும் தற்போது நெருக்கடி நிலையை எட்டியுள்ளதாக எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது நீதித்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சீர்குலைப்பதோடு,ஒரு பரந்த சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, இந்த பணி வெற்றிடங்கள், வழக்குத் தாமதங்கள் மற்றும் அதன் பின்னணியிலுள்ள கட்டமைப்பு மற்றும் நிர்வாகச் சவால்கள் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதிக்கப்பட வேண்டும் எனவும்,
இதற்கான விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.




