புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களுக்குடையில் மோதல்: மூவருக்கு விளக்கமறியலில்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் கைதான மாணவர்கள் மூவரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பாடசாலையில், உயர்தரத்தில் புதிதாக இணைந்திருந்த மூன்று மாணவர்கள், மற்றொரு வகுப்பறைக்குள் நேற்று(14) நுழைந்து அங்கு கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவர்களை இரும்புக் கம்பிகளால் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த இரு மாணவர்கள் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் தாக்குதல் நடாத்திய மூவரையும் கைது செய்த பொலிஸார் சந்தேக நபர்களை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இந்த நிலையில் மூவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.




