இராணுவ சிற்றுண்டி சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனைக்கு தடை: உரிய அனுமதிகள் பெறாவிட்டால் மூடப்படும்!

பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்பாகவுள்ள இராணுவ சிற்றுண்டி சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறாதுவிட்டால் மூடுவதென்றும் தீர்மானிக்கபட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் அமர்வு தவிசாளர் வின்சன் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று(20) நகர சபை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது

இதன்போதே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
மேலும், பாடசாலை வீதியால் கனரக வாகனங்கள் பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் காலை 6:45 மணியிலிருந்து 8:00 மணிவரையும், பாடசாலை முடிவடையும் நேரங்களான
நண்பகல் 12:00 மணிமுதல் 2:00 மணிவரை பயணிக்க தடை விதிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மரக்கறி சந்தை மீண்டும் நவீன சந்தை தொகுதிக்கு மாற்ற பட்டமையால் ஏற்கனவே குத்தகைக்கு வழங்க பட்டவருக்கே அதை வழங்குவது என்றும்,
முனையில் அமைந்துள்ள சிறுவர் மகிழ்வகத்திற்கு வருகை தருவோர்க்கு ரூபா 20/- பணம் அறவீடு பரீட்சாத்தமாக 3 மாதம் வரை அறவிடுவது என்றும், மகிழ்வகம் காலை 9:00 மணியிலிருந்து மாலை 9:00 மணிவரையும் திறப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் தனியார் போக்குவரத்து ஊர்திகளுக்கு உடனடி தாண்டாமாக ரூபா 2000/- அறவிடுவது என்றும், நகரசபை விதிகளை மீறி வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு மரக்கறி சந்தையிலிருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் மரக்கறி மற்றும் சந்தை பொருட்கள் விற்பனை செய்வோர்க்கும் ரூபா 2000 தண்டம் அறவீடு செய்வது, சட்ட நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

நகர சபை எல்லைக்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவதனை ஊக்கிவிப்பதென்றும், இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு அருகில் அமைந்துள்ள இராணுவத்தின் சிற்றுண்டி சாலையில் புகைத்தல் விற்பனை செய்வத்தை தடை செய்வதென்றும், குறித்த இராணுவம் நகரசபை சட்டங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெறப்படாது இயங்குவதால் அதற்கான உரிய அனுமதி பெறாதவிடத்து அதை மூடுவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.



