ஹோர்முஸ் நீரிணையில் எதிரிகளின் கப்பல்களை தடுக்க தமக்கு சட்டபூர்வமான உரிமையுண்டு: ஈரான் தெரிவிப்பு!

ஹோர்முஸ் நீரிணையில் ‘எதிரிகளின்’ கப்பல்களைத் தடுக்க ஈரானுக்கு சட்டபூர்வமான உரிமை என ஈரான் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸிடம், ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரோடு தொலைபேசியில் உரையாடிய அப்பாஸ் அராக்ஷி, ஈரானின் கருத்தை பதிவு செய்துள்ளார்.
ஒரு கடற்கரை நாடு என்ற அடிப்படையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் எதிரிகளின் கப்பல்களைத் தடுக்கும் அதிகாரம் ஈரானுக்கு உண்டு.
இந்தநிலையில், ஹோர்முஸ் நீரிணையில் தற்போது நிலவும் பாதுகாப்பற்ற சூழலுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பு’ நடவடிக்கைகளே காரணம் எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றோடு தொடர்புடைய நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே இந்தத் தடை பொருந்தும் எனவும்,
ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்படவில்லை எனவும், சில நட்பு நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஈரானின் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளின் ஒருங்கிணைப்போடு இந்த நீரிணையில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றன.
இதேவேளை இந்த நீரிணையை பாதுகாப்பாகக் கடக்க விரும்பும் கப்பல்களுக்கு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் வரை ‘போக்குவரத்துக் கட்டணம்’ வசூலிப்பதற்கான சட்டமூலம் ஒன்றை ஈரான் நாடாளுமன்றம் தயாரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



