
எரிபொருள் நெருக்கடியை குறைப்தற்காக, இந்தியாவிலிருந்து 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் அடங்கிய கப்பல் இன்று(28) கொழும்பை வந்தடையவுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியத் தலைவர்களுக்கு இடையே இடம்பெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த அவசர உதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பலில் 20,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 18,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் அடங்கியுள்ளன.
இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் மூலம் இந்த அவசர விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையே தொலைபேசி வாயிலாக கடந்த 24ஆம் திகதியன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
அத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரும் இது தொடர்பாக மார்ச் 23ஆம் திகதியன்று ஆலோசனைகளை நடத்தினர்.
மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் விநியோகஸ்தர்களிடமிருந்து எரிபொருளைப் பெற லங்கா ஐஓசி முன்னதாக நடவடிக்கை எடுத்திருந்தது.
இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் கப்பல் போக்குவரத்துத் தடங்கல் காரணமாக, அந்த விநியோகஸ்தர்கள் “தவிர்க்க முடியாத சூழலை” சுட்டிக்காட்டி விநியோகத்தை இடைநிறுத்தினர்.
இதனால் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தீர்க்கவே இந்தியாவிடம் அவசர உதவி கோரப்பட்டது.



