தையிட்டி – பவானி வீதி தொடர்பான கட்டளை மல்லாகம் நீதிமன்றில் எதிர்வரும் 21 ஆம் திகதி!

யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதி தொடர்பான கட்டளை எதிர்வரும் 21 ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றால் வழங்கப்படவுள்ளது.
பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அந்த முயற்சிகளுக்குத் தடை விதிக்குமாறு பொலிஸாரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.


இதன் போது பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட பிணைமுறி நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் அண்மையில் அளவீட்டுப் பணி இடம்பெறவிருந்தது.
காணிகளின் உரிமையாளர்கள் அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்காத போதிலும், விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை தவிசாளர் சுகிர்தன் அடையாளம் காட்டியிருந்தார்.


இதையடுத்து, அந்த வீதியை இடைமறித்து அமைக்கப்பட்டுள்ள எல்லையை நாளை மறுதினத்துக்குள் அகற்றுமாறும், இல்லையேல் பிரதேச சபை அந்த எல்லையை அகற்றும் என்றும் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளரால் தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தராம தேரருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
பிரதேச சபையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, தையிட்டி விகாராதிபதி பொலிஸாரிடம் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
அந்த முறைப்பாட்டுக்கு அமையவே தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை எடுத்துவரும் நடவடிக்கைக்குத் தடைவிதிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை நாடினர்.
எனினும், பொலிஸாரின் சமர்ப்பணத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்ப்பு வழங்க முடியாதென நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த விடயத்தில் வலி.வடக்கு பிரதேச சபைத் தவிசாளரையும், செயலாளரையும் இன்று முன்னிலையாகுமாறு நீதிமன்று அறிவுறுத்தல் வழங்கியது.
வலி.வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் சார்பாக சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையானார்.
இந்நிலையில் குறித்த வழக்குத் தொடர்பான கட்டளை எதிர்வரும் 21ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.




