இலங்கை - போலந்து இடையே கைதிகள் பரிமாற்று ஒப்பந்தம்!

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையே கைதிகளைப் பரிமாறிக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இரு நாடுகளிலும் தண்டனை பெற்ற குடிமக்கள், தமது எஞ்சிய தண்டனைக் காலத்தைச் சொந்த நாட்டில் அனுபவிக்கவும், அவர்களின் சமூக மறுவாழ்வு மற்றும் மீள் இணைப்புக்கு ஆதரவளிக்கவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவால் இதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றவாளிகள் இடமாற்றச் சட்டத்தின் கீழ், இலங்கையில் தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர் தமது சொந்த நாடுகளுக்குச் சென்று தண்டனையை அனுபவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று, வெளிநாடுகளில் தண்டனை பெற்ற இலங்கைக் குடிமக்களும் எஞ்சிய தண்டனைக் காலத்தை இலங்கையில் அனுபவிப்பதற்கு இந்தச் சட்டம் இடமளிக்கிறது.
போலந்துடன் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான கைதிகள் இடமாற்றங்களை முறைசார்ந்த சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.




